Tuesday, May 22, 2012

மூளை உற்சாகப் புதிர்கள் -3


கீழ் வரும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் அடுத்து வரும் எழுத்து என்னவாக இருக்கும்?

O,T,T,F,F,S,S,E,_____?

2. ஐந்தில் பாதி நான்கு. எப்படி?

3. ஒரு பொருளின் எல்லாப் பக்கமும் ஓட்டை. ஆனாலும், அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது. அது என்ன?

4. வட அமெரிக்காவில் உள்ள ஒருவரைத் தென் ஆப்பிரிக்காவில் புதைப்பதை அந்த நாட்டுச் சட்டம் அனுமதிப்பது இல்லை. ஏன்?

5. மூன்று மாளிகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று சிவப்பு, மற்றொன்று பச்சை, மற்றது வெள்ளை. நடுவில் இருக்கக்கூடிய மாளிகையின் இடது புறத்தில் சிவப்பு மாளிகை இருக்கிறது. நடுவில் இருக்கக்கூடிய மாளிகையின் வலது புறத்தில் பச்சை மாளிகை இருக்கிறது. அப்படிஎன்றால் வெள்ளை மாளிகை எங்கே இருக்கிறது?

6. கண்ணனுக்குத் தோட்டத்து மாங்காய் பறித்துச் சாப்பிட ஆசை. அதுவும் திருட்டு மாங்காய். மாந்தோப்புக்குச் சென்றவன், அடுத்தடுத்து மூன்று காவலாளிகள் இருப்பதைக் கண்டான். அவர்களை மீறி மாங்காய் பறிக்க முடியாது. திடீரென கண்ணனின் மூளைக்குள் பளிச் பல்ப். முதல் காவலாளியிடம் சென்றவன், 'என்னைத் தோப்புக்குள் அனுமதித்தால், நான் பறிக்கும் மாங்காய்களில் சரிபாதியை உங்களுக்குத் தருவேன். அதில் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் எனக்குத் திருப்பித் தந்தால் போதும்!' என்றான். காவலாளி அதற்குச் சம்மதித்து அவனை உள்ளே அனுமதித்தான். இதுபோலவே மற்ற இரண்டு காவலாளிகளிடமும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான். வேண்டிய மாங்காய்களைப் பறித்துக்கொண்டு திரும்பி வரும்போது மூன்று காவலாளிகளிடமும் ஏற்கெனவே சொன்னவாறு கொடுக்கல் வாங்கல் முடித்து வெளியே வந்தான். ஆனாலும், பறித்த மாங்காய்களில்ஒன்று கூடக் குறையாமல் கண்ணன் கைகளில்இருந்தது. எப்படி?

7. நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்கு வெளியே ராஜு மிகுந்த பதற்றத்துடன் காத்திருக்கிறான். தன் பெயர் அழைக்கப்பட்டவுடன் வேகவேகமாக உள்ளே சென்றவன், மிதியடி தடுக்கி, கையில் இருந்த ஃபைலுடன் நேர்முகத் தேர்வு நடை பெற்ற அறைக்குள் விழுந்துவிட்டான். கடுப்பான அதிகாரிகள், ''ராஜு! வாட் இஸ் திஸ்?'' எனக் கேட்டனர். பதற்றத்துக்கு நடுவே ராஜு சொன்ன பதிலில் அதிகாரிகளின் கோபம் மறைந்து, ''ஓ.கே... ஓ.கே! கம் இன்சைட்!'' எனச் சிரித்துக்கொண்டே கூறினர். அப்படி அவர்கள் சிரிக்கும் அளவுக்கு ராஜு என்ன சொல்லிஇருப்பான்?

8. நேர்முகத் தேர்வில் மோகனிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. 'உங்களது இடப்பக்கமும், வலப் பக்கமும் இரண்டு கிணறுகள் உள்ளன. இடப்பக்கக் கிணறு முழுக்க நீர் நிரம்பி இருக்கிறது. வலப்பக்கக் கிணற்றில் ஒரு சொட்டு நீர்கூட இல்லை. இரண்டு கிணறுகளும் சம அளவு ஆழம் உடையது. உங்களிடம் ஒரு வாளி தரப்படுகிறது. அந்த வாளியைப் பயன்படுத்தி எத்தனை முறைகளில் உங்களால் இடப்பக்கக் கிணற்றில் இருந்து நீரை வலப்பக்கக் கிணற்றுக்கு மாற்ற முடியும்?'' மோகன் அந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிக்கவில்லை. ஆனாலும், அவனுக்கு வேலை கிடைத்தது. ஏன்?

9. 5+5+5=550. ஒரே ஒரு கோடு போட்டால் இந்த சமன்பாடு உண்மையாகும். அந்தக் கோடு எது?

10. ஒரு பொருள். அதில் ஒன்று வாங்கினால் ஐந்து ரூபாய், இரண்டு வாங்கினால் அதே விலைதான். 12 வாங்கினால் பத்து ரூபாய். 144 வாங்கினால் பதினைந்து ரூபாய். அந்தப் பொருள் என்ன?

11.கிழக்குத் திசையில் இருந்து மேற்கு நோக்கி ஒரு மின்சார ரயில் 90 கி.மீ. வேகத்தில் செல்கிறது. அது வெளியிடும் புகை எந்தத் திசையில் செல்லும்?

12. நான் பொய் சொல்லவே மாட்டேன். என்னிடம் இரண்டு நாணயங்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால், சத்தியமாக அதில் ஒன்று 50 பைசா நாணயம் இல்லை. எப்படி?

13. நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர். பஞ்சை எலிகள் நாசமாக்கிவிடுவதால் அவற்றைப் பிடித்துத் தின்ன ஒரு பூனை வளர்த்தனர். பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்குத் தங்க மோதிரம், சங்கிலி எனப் போட்டு அழகு பார்த்தனர். ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்தக் காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணெயில் பஞ்சை நனைத்துக் கட்டுப்போட்டார். அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம்பட்ட காலில் தீ பிடித்துக்கொள்கிறது. தன் காலில் தீயைப் பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது. அதற்கு நஷ்டஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எரிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர். ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது. எப்படி?

Ans:

1. N. N for Nine. (O-One, T-Two, T-Three...E-Eight, N-Nine!)

2. இப்படி... F( IV )E.

3. பஞ்சு.

4. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் அல்ல... உயிரோடு இருப்பவரைப் புதைப் பதற்கு எந்த நாட்டுச் சட்டத்திலும் இடமில்லைங்கோவ்!

5. வெள்ளை மாளிகை வாஷிங்டன் டி.சி-யில் உள்ளது. (அமெரிக்கா போனா ஒரு எட்டு அதையும் பார்த்துட்டு வந்துருங்க!)

6. கண்ணன் பறித்ததே இரண்டு மாங்காய்கள்தான். கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு சரியாக வரும்!

7. ''this' is a pronoun!' என்பதுதான் ராஜு சொன்ன பதில். 'திஸ் என்பது என்ன?' என்பதுதான் தனக்கான முதல் கேள்வி என நினைத்து அதற்குப் பதில் சொல்லிவிட்டான் ராஜு.

8. 'அது தரப்படும் வாளியின் அளவைப் பொறுத்தது!' என்பதுதான் மோகன் சொன்ன பதில். கொஞ்சம் யோசியுங்கள்... கிணறும், வாளியும் கண் முன் இல்லாமல், அந்தக் கேள்விக்குச் சரியான விடை என்று ஏதாவது இருக்கிறதா? அதனால், அந்த சமயோசித விடைக்கு வேலை கிடைத் தது!

9. 545+5=550 அல்லது 5+545=550.

10. அந்தப் பொருள் பிளாஸ்டிக் நம்பர் பிளேட். 1, 2 , 1 - 2, 1 - 4 - 4

11. மின்சார ரயில் (எலெக்ட்ரிக் டிரெயின்) செல்லும்போது புகை விடாது தோழர்களே!

12. சத்தியமாக அதில் ஒன்று 50 பைசா நாணயம் இல்லை. ஆனால், இன்னொன்று 50 பைசா நாணயம் அவ்வளவுதான்!

13. பூனை தீப்பிடித்த காலால் ஓட முடியாது. பஞ்சு எரிந்து நாசமாகக் காரணம் பூனையை ஓடச் செய்தது மீதி மூன்று கால்களும்தான். அதனால் அந்தக் கால்களின் உரிமையாளர்கள்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பது லாஜிக்!

மூளை உற்சாகப் புதிர்கள் -2


1. புதிதாகக் கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலையில் நிறையக் கைதிகளை அடைத்தனர். பிறகுதான் தெரிந்தது, அங்கிருக்கும் ஒரு மதில் சுவர் அவ்வளவு சிறியது என்று! யோசித்த சிறை அதிகாரிகள், அந்தச் சுவருக்கு அருகில் சும்மாச்சுக்கும், 'இங்கு 22,000 வோல்டேஜ் மின்சாரம் செல்கிறது. யாரும் தொட வேண்டாம்' என்று போர்டு மாட்டி, சில கம்பிகளையும் நட்டுவைத்தனர். அந்தச் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு கைதி அன்றிரவே அந்த மதில் சுவரைத் தாண்டிக் குதித்துச் சென்றான். எப்படி?

2. வரிசையாக வாரத்தின் மூன்று நாட்கள் சொல்லுங்கள். ஆனால், கிழமைகள் பேர் வரக் கூடாது!

3. லலிதாவின் அப்பாவுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். ABXX, ACXY, ADXZ எனில் நான்காவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும்?

4. ரூபா சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றாள். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினாள். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரூபா சாப்பிட்டாள். மொத்தம் ரூபா சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

5. என் நண்பனுக்குத் திருமணம் ஆகவில்லை. அவன் எந்தக் குழந்தையையும் தத்து எடுக்கவும் இல்லை. ஆனாலும், அவனுக்கு வரும் கடிதங்கள் எல்லாம், 'அன்புள்ள அப்பாவுக்கு' என்றே தொடங்கும். மர்மம் என்ன?



Ans:

1) அவன் எழுதப் படிக்கத் தெரியாதவன். அதனால் அந்த போர்டு வாசகங்களைப்பற்றிக் கவலைப்படாமல் தாண்டிக் குதித்துச் சென்றான்!

2) நேற்று, இன்று, நாளை!

3) ABXX, ACXY, ADXZ மற்றும் லலிதா. எப்பூடி!

4) 21 சாக்லேட் என்று நீங்கள் கணக்கிட்டு இருந்தால்கூடத் தப்பு. மொத்தம் ரூபா சாப்பிட்டது 22 சாக்லேட்டுகள். காசு கொடுத்து வாங்கியது 15 சாக்லேட்டுகள். அதன் 15 உறைகளையும் திருப்பிக் கொடுத்துப் பெற்றவை ஐந்து சாக்லேட்டுகள். அதில் மூன்று உறைகளையும் கொடுத்துப் பெற்றது ஒரு சாக்லேட். ஏற்கெனவே கையிலிருக்கும் இரண்டு சாக்லேட், இப்போது கையிலிருக்கும் ஒரு சாக்லேட்... இவற்றின் உறைகளைக் கொடுத்துப் பெற்றது ஒரு சாக்லேட். ஆக 15+5+1+1=22.

5) என் நண்பனின் பெயர் 'அப்பாவு'!


மூளை உற்சாகப் புதிர்கள் -1


1) இந்த இரண்டு தாள்களையும் ஒரே சமயத்தில் மேலிருந்து கீழே போட்டால், 'அ' தாள் முதலில் தரையில் விழ வேண்டும். வேறு எந்தப் பொருளையும் அவற்றோடு இணைக்கக் கூடாது. எப்படி 'அ' தாளை முதலில் தரை தொட வைப்பீர்கள்?

2) தனது படையில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கச் சொன்னார் மன்னர். அதிகாரி வந்து 'சிக்ஸ்டி ஹெட்ஸ்' (60 தலைகள்) என்று சொன்னார். இன்னொரு முறை கணக்கெடுக்கும்படி வேறு ஒரு அதிகாரியை அனுப்பினார் மன்னர். அவர் வந்து 'சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்' என்று சொன்னார். அவையோர் புரியாமல் குழம் பினார்கள். ஆனால், மன்னர் 'இரண்டுமே சரி' என்றார். எப்படி?

3) இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல உங் களுக்கு அதிகபட்சம் இரண்டு விநாடிகள்தான் நேரம். கமான் க்விக்! டெலிபோன் அல்லது செல்போனின் டயல் பட்டன்களில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்கினால் (1 ஜ் 2 ஜ் 3 ஜ்... என்று) வரும் தொகை என்ன? ம்... முதல் நொடி முடிந்துவிட்டது!

4) 30 1/2 + 10 = ?

5) 1950-ல், நமது பிரதமரின் பெயர் என்ன?

6) வாய் பேச முடியாத ஒருவர் கடைக்குச் சென்று சிகரெட் வேண்டும் என்றால் எப்படிக் கேட்பார்? ஆள் காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வாயில்வைத்து ஊதுவதுபோலக் கேட்பார். அதேபோல, கண் தெரியாத ஒருவர் சீப்பு வேண்டும் என்றால் எப்படிக் கேட்பார்?

7) கி,ஙி,சி,ஞி இந்த நான்கு எழுத்துக்களே வராமல் 100 ஆங்கில வார்த்தைகளைக் கடகடவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

8. என்னிடம் மூன்று லிட்டர் ஜக்கும், ஐந்து லிட்டர் ஜக்கும் இருக்கிறது. எனக்குச் சரியாக ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் தேவை. இரண்டே முயற்சிகளில் ஒரு லிட்டர் நீரை எப்படி அளந்து எடுப்பது?

Ans:

1) 'அ' பேப்பரைக் கசக்கிக் கீழே போடுங்கள்!

2) முதல் முறை கணக்கெடுத்தவர் 'sixty heads' என்று '60 தலைகள்' எனப் பொருள்படக் கூறினார். இரண்டாமவர் 'sixty fore-heads' என்று '60 நெற்றிகள்' எனப் பொருள்படக் கூறினார். இரண்டுமே சரிதானே!

3) ரொம்ப சிம்பிள்... இரண்டு விநாடிகளே அதிகம்தான். டயல் பட்டன்களில் உள்ள ஜீரோவை எந்த இடத்தில் சேர்த்துப் பெருக்கினாலும், விடை ஜீரோவாகத்தானே இருக்கும்!

4) 25 என்று கச்சிதமாகப் பதில் சொல்லியிருந்தால், அது தப்பு மாமே! சரியான விடை 70. எப்படி? இப்படி.... 30ஐ 1/2ஆல் வகுத்தால் வரும் விடை 60. அதனுடன் 10 சேர்த்தால் 70. பழக்கப்பட்ட உங்கள் மனது 30-ல் இரண்டை அடித்தால் 15 என்று விடை சொல்லி இருக்கும். மாத்தி யோசி மாப்ளே!

வழிமுறை: 30 1/2 + 10
= 30 * 2 + 10
= 60 + 10 = 70

5 அப்போதும் அவர் பெயர் மன்மோகன் சிங்தான். 1950-ல் ஜவஹர்லால் நேருதான் பிரதமர். ஆனால், இப்போதைய பிரதமரின் அப்போதைய பெயர்தானே கேட் டோம்!

6) அவருக்குத்தான் பேச வருமே. 'சீப்பு வேண்டும்!' என்று வாய் விட்டுக் கேட்பார்!

7) Zero முதல் Ninetynine வரை உள்ள 100 வார்த்தைகளிலும் A,B,C,D என்ற எழுத்துக்கள் வராது!

8) மூன்று லிட்டர் ஜக்கில் நீரை நிரப்பி, ஐந்து லிட்டர் ஜக்கில் ஊற்றவும். மீண்டும் மூன்று லிட்டர் ஜக்கில் நீரை நிரப்பி ஐந்து லிட்டர் ஜக்கில் ஊற்றினால், இரண்டு லிட்டர் தண்ணீர் போக, ஜக்கில் சரியாக ஒரு லிட்டர் நீர் மட்டுமே மிச்சம் இருக்கும்!

Friday, May 18, 2012

ஒரு பேட்டி....


கவிஞர் வைரமுத்து. "உங்கள் துறையில் வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்று கேட்டேன்.
"என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. அது உங்கள் பார்வைதான். இந்த வருடம் எனக்குத் தேசிய விருது கிடைத்தது உங்கள் பார்வையில் வெற்றியாகக் கருதினால், அடுத்த வருடம் எனக்குக் கிடைக்க£மல் போனால், அது தோல்வியாகக் கருதப்படலாம். என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்!'' என்றார்.

கெவின் கேர் நிறுவனத்தின் எம்.டி. ரங்கநாதன் ஒரு விஷயம் சொன்னார்... "நீங்கள் செய்துகொண்டு இருக்கிற வேலைகள் எதுவுமே உங்களின் முழு ஈடுபாட்டோடு நடக்கவில்லை என்றால், நீங்கள் தேடிக்கொண்டு இருப்பது இதுவல்ல. முதலில், உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடியுங்கள். அதைவிட முக்கியமானது, இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையை இன்னும் ஈடுபாட்டோடு செய்யுங்கள். அந்த பேலன்ஸ் ரொம்ப முக்கியம்!''

ஏ.ஆர்.முருகதாஸை:"எட்டு வருஷம் போராடி இருக்கீங்க. 'போதும்டா சாமி. ஊருக்குப் போயிடலாம் என்று தோன்றியது இல்லையா?'' என்று கேட்டேன். "போயிருக்கலாம். ஆனா, எனக்கான கதவு நாளைக்குத் திறக்கலாம். நான் இன்னிக்குப் போயிட்டேன்னா, என்னோட எட்டு வருஷ உழைப்பு போச்சே!'' என்றார்.

கோபிநாத்: உங்கள் இலக்கு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதாக இருக்கலாம். இப்போது நீங்கள் அந்த இடத்தைத் தொடுவதற்கான எந்தத் தடயமும் தெரியாமலும் இருக்கலாம். அதற்காக உங்கள் சாம்ராஜ்ய தாகத்தை தணித்துக்கொள்ளாதீர்கள். செய்கிற வேலையை ஈடுபாட்டோடு செய்துகொண்டே இருங்கள்.
'எதுவுமே செய்வதற்குத் தகுதியான வேலைதான், அதனை ஈடுபாட்டோடு செய்கிறபோது!' என்று சொன்ன மார்ட்டின் லூதர் கிங், 'நீ தெருவைச் சுத்தம் செய்கிறவனாக இருந்தாலும், அதனை நேர்த்தி யோடும், ஈடுபாட்டோடும் செய்! சுத்தமாக இருக்கும் தெரு உன்னைக் கவனிக்க வைக்கும். உன்னைப்பற்றிப் பேசவைக்கும்!' என்கிறார்.
இப்போது என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு இருங்கள். உங்கள் இலக்கை நோக்கிய பயணம் ஈடுபாட்டோடு இருக்கட்டும்.

இளையராஜாவின் :'திட்டமிட்டு எதையும் நான் செய்யறது இல்லை. திட்டம் போட்டு நடக்கணுங்கிறது நம்ம கையிலா இருக்கு? நமக்கு விதிச்சது இல்லாமல் எதுவும் நடக்காது. 'அன்னக்கிளி' ஆரம்பிச்சு 25 படம் வரைக்கும் பிளான் பண்ணி மியூஸிக் போட்டிருக்கலாம். அப்புறம் ஆன்மிகம், தெய்வ நம்பிக்கைன்னு வந்த பின்னாடி, எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம்தான். How to name it, Nothing but wind, திருவாசகம் எல்லாமே தானாக நிகழ்ந்ததுதான். காற்றுபோல, ஒளிபோல இசையும் பரவி யாரையாவது, எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். கொட்டுகிற இசை மழை யில் எங்கேயாவது, யாராவது துளிர்க்கணும்... பூக்கணும். அடையாளம் தெரியாத இந்தப் பயணத்தை இசை செய்துக்கிட்டே இருக்கணும். நொடிக்கு நொடி என்னைப் புதுப்பிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா இயங்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட நல்ல சூழலில் என்னை இறைவன் வைத்திருக்கும்போது, நான் நிறைவாக உணர்வது தானே நியாயம்?
நமக்குத் தெரிஞ்ச இசையை இளைஞர்களுக்குக் கொடுத்துட்டுப் போகணும்னு மட்டும் தோணுது. அதற்குச் சூழல் அமையணும். நான் எடுத்துட்டுப் போக ஒண்ணுமே இல்லை. கொடுத்துட்டுப் போகத்தான் இருக்கு. எனது அனுபவத்தைப் பகிரவும் இளைய தலைமுறைக்கு விட்டுட்டுப் போகவும் தயாரா இருக்கேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞர்களை இசை மூலமா ஒன்றிணைக்கணும். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!''

Tuesday, May 15, 2012

மலர்களின் மகத்துவம்! Tips Part 6


மலர்களின் மகத்துவம்!

''மனிதர்கள் எப்போதும் மனநிலையைச் சமமாக வைத்துக்கொள்ளத் தெரியாமல் குழம்புகிறார்கள். அவர்கள் மலர்களோடு தங்கள் நேரத்தைச் செலவிடலாம். ஏனெனில், மலர்களுக்கு அமைதிப்படுத்தும் இயல்பு உண்டு. 'எனக்கு எவ்ளோ பிரச்னை தெரியுமா?’ என்று சின்ன விஷயத்துக்காகக்கூட அதிகமாக அலுத்துக்கொள்ளும் மனநிலையை  மாற்றும் தன்மை ரோஜாவுக்கு உண்டு. புதிய சூழ்நிலைக்குத்  தன்னை மாற்றிக்கொள்ள முடியாத மனநிலையை, வால்நட் மலர் மாற்றி அமைக்கும். 'கோபத்தைக் குறைப்பதில் முதல் பரிசு தாமரைக்குத் தரலாம்’ என்கிறார் அன்னை. பரந்து விரிந்த மனநிலையை உருவாக்கும் சக்தி சூரியகாந்திப் பூவுக்கு உண்டு. துளசி, அர்ப்பணிப்புக் குணத்தை அதிகரிக்கும். மல்லிகை, பணிவைக் கூட்டும். பெகோனியா, ஆறுதல் கொடுக்கும். உதவும் குணத்தை அவரைப் பூ அளிக்கும். கொய்யாப் பூ அமைதி தரும். பாரிஜாதம், மகிழ்ச்சிக்கானது'' என்கிறார் விஜய கிருஷ்ணன்.
மலர்கள் என்றாலே மகிழ்ச்சிதானே!

Thursday, May 10, 2012

7 குணங்கள்


 அந்த 7 குணங்கள்
1) எளிமை: கற்பனை, நெகிழ்வுத்தன்மை, தொடர் கற்றல்கொண்ட சிந்திக்கும் குணம்.
2) புரிந்துகொள்ளுதல்: எதையும் தெளி வாகப் புரிந்துகொள்ளுதல்.
3) தீர்க்கம்: எந்தச் சிக்கலுக்கும் அதன் பின்னணியையும் அலசி ஆராய்ந்து தெளி வான முடிவெடுத்தல்.  
4) துணிச்சல்: சாத்தியமான ரிஸ்க்கைத் துணிந்து எடுக்கும் ஆற்றல்.
5) துல்லியம்: எந்தத் தகவலையும் அதன் முன்-பின்புலம் அறிந்து துல்லியமாக முடிவெடுத்தல்.
6) சுய ஒழுக்கம்: நினைத்ததைச் செய்து முடித்தல்.
7) சின்னப்புள்ளத்தனம்: எதிலும் ஒளிந் திருக்கும் நகைச்சுவையை ரசிப்பது!
 எளிமை
எந்தவொரு பிரச்னைக்கும் மிகமிக அடிப் படையான சங்கதியில் இருந்தே தீர்வை யோசிக்க வேண்டும்.

ரமண மகரிஷி and பால் பிரண்டன்...

டிஸ்கவரி சானல்ல - பழைய இந்தியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி , ஹரித்வார் கும்பமேளா நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறப்போ - கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் , பரவச உற்சாகத்தில் - மேனியெல்லாம் விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு , காவி வேஷ்டி அணிந்த சாமியார்களை காட்டுவார்கள். பாம்பாட்டி, குரங்காட்டி என்று ஒரு ஸ்லாட்டாவது வரும்.

இதையெல்லாம் பார்க்கும் வெளி நாட்டுக்காரர்கள் மனதில்  - ஓ.. இந்தியாவில் இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மனோபாவம் வந்துவிடுகிறது. சமீபத்திய IT புரட்சி நடந்து, இந்தியர்கள் உலகம் முழுவதும் இன்னும் அதிகமாக வசிக்கத் தொடங்கியபின், கொஞ்சம் மனோபாவம் மாறி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். இப்போதும், வெளி நாட்டில் இருந்து இங்கு வரும் நண்பர்கள், யாராவது காவி வேட்டியைக் கண்டால்  கொஞ்சம் மிரளத் தான் செய்கிறார்கள். மந்திரம் போட்டு விடுவார்களாம். நமக்குத் தானே தெரியும், இங்கு காவி கட்டி  பிச்சை எடுக்கும் பெரும்பாலோர் பிழைக்க வழியில்லாமல் / வேலை செய்ய பிடிக்காத சோம்பேறிகள் என்று. 

ஆனால், மேலை நாட்டு தத்துவம் படிப்பவர்கள் - நமது இந்தியாவை ஒரு ஞான பூமியாகத் தான் பார்க்கின்றனர். விஞ்ஞானம் விளங்க முடியாத பல விஷயங்கள் , இங்கு இருக்கும் சில துறவிகள் அனாயசமாக செய்வது, அவர்கள் வியக்கும் ஒன்று. 

பால் பிரண்டன் என்பவர் - ஒரு அறுபது , எழுபது வருடத்துக்கு முன்பு இந்தியா வந்தவர். உலகம் முழுவதும் - எகிப்திய பிரமிடு, இஸ்லாம் , இந்தியா , மந்திரவாதிகள், சித்தர்கள் என்று ஒரு விஷயம் கூட விடவில்லை. பிரித்து மேய்ந்து இருக்கிறார். அவரது புத்தகங்களை படித்த வெளிநாட்டவர்கள் - கூட்டம் கூட்டமாக இந்தியா வரத் தொடங்கினார்கள். இந்தியாவில் உள்ள ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதை அவர் தன் அனுபவக் கட்டுரைகளாக விவரித்து இருந்த விதம் அருமை.  

உலகம் முழுவதும் தேடிக்கொண்டு இருந்த விஷயத்துக்கு , அவருக்கு விடை கிடைத்த இடம் எது தெரியுமா? எத்தனையோ மத குருமார்களுடன் ,  இந்தியாவிலும் மந்திரவாதிகள், சித்தர் புருஷர்கள் என அவருக்கு அனுபவம் இருந்தபோதிலும், கடைசியில் அவர் மனம் ஒடுங்கிய இடம், ரமண மகரிஷியிடம். அண்ணாமலையின் அடிவாரத்தில், அற்புதமான அருள் அலைகளுடன் - ஒரு மகான் அமர்ந்து இருப்பதை அவர் விவரித்து இருப்பதைப் படித்துப் பாருங்கள். 

எங்கிருந்தோ வருபவர்களுக்கு உள்ள தேடல், நாம் இன்னும் தொடங்கக் கூட இல்லாத ஒரு விஷயமாக இருப்பதை உணரமுடியும். சரி,  வாருங்கள் பால் பிரண்டன் நம்மிடம் எதையோ சொல்லக் காத்திருக்கிறார்...

"ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

 "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"


"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட    எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள்.

அட, ஒருவேளை இந்த மாதிரி வர்ற திருடர்கள் கூட ஏமாந்து போகக்கூடாதுன்னு நினைச்சித்தான் , இந்த கால (ஆ) சாமிகள் நிறைய பணத்தை சேர்த்து வைக்கிறாங்களோ..  (# டவுட்டு) 

 ரமண மகரிஷி  அந்த கொள்ளையர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...." 

எப்பேர்ப்பட்ட மகான் பிறந்த பூமியில் நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா? உடனே இப்போ இருக்கிற ஆளுங்களை நினைச்சு கோபப்படாதீங்க. சாதாரண வேங்கட ரமணன் என்னும் சிறுவன், ரமண மகரிஷியாக மாறும்போது, நம்மால் அந்த அளவு முடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் நாம் யார் என்பதாவது உணர முற்படுவோமே..!

நாம், நம்ம வீடு, நம்ம ஊர், நம்ம நாடு, பூமி, சூரிய மண்டலம், பால்  வெளி, அண்ட பேரண்டம் - பற்றியெல்லாம் பார்க்கிறப்போ - அட போய்யா... இதுல கடவுளாவது ஒன்னாவது ... ... இதுல கடவுள் எங்கே இருக்க முடியும்? அப்படி ஒருத்தர் இருந்தா, நம்மளை பார்க்கிறது தான் வேலையா அவருக்குன்னு ஒரு கேள்வி வரலாம்.... 

உங்களுக்கு வருதோ , இல்லையோ - எனக்கு வருது.... 
இதோ , நாளைக்கு சித்ரா பௌர்ணமி. சித்திர குப்தன் பிறந்த நாள்னு ஒரு சிலர் சொல்றாங்க. அதுக்கு ஒரு கதை வேற.நம்ம செய்ற பாவ புண்ணியம் எல்லாம், அவர் கணக்கு வைப்பாராம். பயங்கர காமெடியா இருக்கு ... என்று தான் தோன்றுகிறது இல்லையா..?

ஆனா, சத்தமே இல்லாம சில மந்திர ஜெபங்கள் ஜெபித்து , நினைத்ததும் அகத்தியர் போன்ற சித்தர்களை தரிசனம் செய்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்களே..! தீராத சில பிரச்சினைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வும் பெறுகிறார்களே.. சித்தர் இருப்பது உண்மையெனில், அந்த இறைவன் ஒருவர் இருப்பது நிஜம் தானோ..?  வள்ளலாருக்கும், ரமணருக்கும், ராமக்ருஷ்ணருக்கும் கடவுள் காட்சி கொடுத்தது உண்மையென்றால், நமக்கும் அந்த பாக்கியம் ஏன் கிடைக்காது , முழுமையாக நம்பி, அவன் இடத்தில் நம் தீர்வு தேடுவோம்... வெற்றி நிச்சயம்.  

இறைவனுக்குக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல குரு ஒருவர் இருந்தால் நம் வேலையும் எளிது. தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை.. ஆனால் என்னதான் இருந்தாலும், ரமண மகரிஷி கூறியது போல அவரவர் தனிப்பட்ட அனுபவம் வேண்டும். அது கிடைக்க நாம் நம்முள்ளே தேடுவோம்... 

கபீர் தாஸ்

ஒரு சிலர் குரு உபதேசம் பெரும் விதம் மிகவும் விசித்திரமாக இருக்கும். சுகப்பிரம்ம மகரிஷி, பூவுலகில் பக்தியை பரப்ப கபீர் தாசராக அவதரித்திருந்தார். அப்போது, குரு உபதேசம் பெறவேண்டி, குருவை தேடி அலைந்தார். ஆனால், பிறப்பில் இஸ்லாமியரான இவரை எவரும் இவரை சீடனாக ஏற்றுக்கொண்டு மந்திரோபதேசம் செய்ய விரும்பவில்லை. அப்போது காசியில் இருந்த ராமானந்தரிடம் சென்று தமக்கு மந்திரோபதேசம் செய்துவைக்கும்படி கேட்க, அவரோ இவரை திட்டி அனுப்பிவிட்டார். இருப்பினும் கபீர் மணம் தளரவில்லை. கடைசீயில் ஒரு உபாயம் கண்டார். பெரியவர்கள் தங்களை அறியாமல் ஏதாவது தவறு செய்திவிட்டால் உடனே இறைவன் நாமாவை கூறுவார்கள். எனவே அதையே நாம் மந்திரோபதேசமாக கொள்ளலாம் என்று கருதி, ராமானந்தர் காசியில் நீராட வரும் வழியில் முன்தினம் இரவே சென்று நதி தீரத்தில் படித்துறையில் உள்ள படியில் ஒடுங்கி படுத்துக்கொண்டார். அதே போல, அதிகாலையில், நீராட வந்த ராமானந்தர் தெரியாமல் இவரை மிதித்துவிட, 'ராம்... ராம்' என்றார். அதையே தமக்கு உபதேசமாக ஏற்றுக்கொண்ட கபீர் அதற்க்கு பிறகு, பரம சந்நியாசி ஆகி, பக்தியை பரப்பி சாட் சாத் அந்த ராமனையே தர்சித்தாராம். திருமால் அடியார்களின் வரலாற்றை கொண்டாடும் 'மகா பக்த விஜயம்' நூலில் இவரது வரலாறு தனிசிரப்புடன் போற்றப்படுகிறது. 

எனவே, ஆன்மீகத்தில் கரை காணவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முதலில் DETERMINATION இருக்கவேண்டும். பின்னர் அனைத்து சுலபத்தில் சாத்தியமாகும்.

Thursday, May 3, 2012

Place to Visit in Chennai... Tips -5


Chennai Information
Vandaloor zoo
Sathyam Theater
Besant Nagar Beach
Pabam Sami temple 
Mylapore kabali Temple








தாம்பூலம் தரும் முறை Tips - 4

தாம்பூலம் தரும் முறை
                                                                                               

   
                        

சென்ற பதிவில் சுருக்கமாகப் பூஜை செய்யும் முறையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் தாம்பூலம் தரும் முறைகள் பற்றிக் காணலாம்.

தாம்யத தந்த தயத்வம் ஜனதா:
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.

இந்த வரிகள் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக,நம்முன் வாழ்ந்திருந்த ஸ்ரீஸ்ரீமஹாபெரியவர், இயற்றிய 'மைத்ரீம் பஜத' எனத் தொடங்கும் கீர்த்தனையின் வரிகள் என்பதைப் பலரும் அறிவர். திருமதி. எம்.எஸ்.அவர்கள், ஐ.நா.சபையில் பாடுவதற்காக இந்தப் பாடலை இயற்றித் தந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். இதன் பொருள்............ 

‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்;  பூமியில் உள்ள சகல ஜனங்களும் சுபிட்சமுடன் விளங்கட்டும்’ 
என்பதாகும்.


தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்
  1. உயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம்.'அதிதி' என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, 'பசி ' என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும். அவர் கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஆனால் அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் அளித்தல் வேண்டும். 
  2. வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும்.  
  3. வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்குப் பின் தாம்பூலம் படைத்து வழிபட வேண்டும். சாக்தர்கள் தங்கள் பூஜையில், தேவிக்கு, முக்கோணவடிவிலான தாம்பூலம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல். 
  4. தாம்பூல பூரித முகீ..............என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.இதன் பொருள்'தாம்பூலம் தரித்ததால்,பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்'என்பதாகும். 
  5. விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, 'நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர். 
6. தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.

திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.

                        

விசேஷங்களுக்கு அழைக்கச் செல்லும்போதும் தாம்பூலம் வைத்து அழைப்பது மிகுந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப் படுகிறது.விருந்து உபசாரங்கள் தாம்பூலத்துடனேயே நிறைவு பெறுகின்றன.

 

7. வெற்றிலை போடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றாலும் இது சத்வ குணம் கொண்டதல்ல. ஆகவேதான் பிதுர் தினங்களில் வெற்றிலை போடலாகாது.

பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம்.


இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.

1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை. 

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம். 

மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. 

சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக, 

கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க, 

வளையல், மன அமைதி பெற‌ 

தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)

பழம்,அன்னதானப் பலன் கிடைக்க, 

பூ, மகிழ்ச்சி பெருக, 

மருதாணி, நோய் வராதிருக்க, 

கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,  

தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,

ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ 
வழங்குகிறோம்.

மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. காலப் போக்கில், ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே. 


தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள். தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 

அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.  வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து, அந்தஸ்துவேறுபாடு,பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. 

மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. நம் எல்லோர் இதயத்துள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள்.  

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும் 
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா " 

என்கிறார் அபிராமி பட்டர்.

எனக்குத் தெரிந்த ஒரு மூதாட்டி, வெற்றிலை, பாக்கு, ஒரு சிறு வெல்லத்துண்டு, பூ முதலியவையே வைத்து, வெள்ளி தோறும் வெற்றிலை பாக்குத் தருவார். இன்று அவர் பேரன், பேத்திகள் மிக நல்ல நிலையில் இருக்கின்றனர். வீட்டுக்கு வருபவருக்கு ஏதேனும் உண்ணத் தர வேண்டும் என்பதால் வெற்றிலை,பாக்குடன் பழம் தருகிறோம். மற்றப் பொருட்கள் தர வசதிப்படாவிட்டாலும், அதற்குரிய பலன்கள் குறைந்து விடாது.

குறிப்பாக, இங்கே நான் ரவிக்கைத்துணி பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
அந்நாளில், சுமங்கலிப் பெண்களே ரவிக்கை அணிவது வழக்கம். இப்போது போல, அதிக அளவு உடைகள் வாங்குவதும் வழக்கத்தில் இல்லாத காலம். ஆகவே, ரவிக்கைத்துணி வைத்துக் கொடுப்பது,நிறைய பேருக்கு, உபயோகமாக இருந்தது. 

இப்போது எல்லாப் புடவைகளுடனும், அதற்குரிய 'ப்ளவுஸ்' வந்து விடுகிறது. நாம் கொடுக்கும் ரவிக்கைத்துணி, பல சமயம் நமக்கே 'ரொட்டேஷனில்' வந்து விடுகிறது. சில கடைகளில் வைத்துக் கொடுப்பதற்கென்றே, மலிவு விலையில் ரவிக்கைத்துணி விற்கிறார்கள். அவற்றைத் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுக்கலாமே என்று தைத்தால், தைக்கும் போதே கிழிகிறது. அவற்றை வைத்துக் கொடுப்பதால் என்ன லாபம்?

வஸ்திர தானம் என்பது எளியோருக்கு வழங்கினால் தான் பூரண பலன். ஆகவே அம்மாதிரி உள்ளோருக்கு, புடவை, வேஷ்டி வழங்குதல் சிறப்பு.ஆகவே, உபயோகிப்பவர்களுக்கு ரவிக்கைத்துணி கொடுங்கள். மற்றவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் உகந்தது.
  
                               

அதேபோல், கண்ணாடி,சீப்பு தருமுன், நல்ல தரமான, உபயோகிக்கும் நிலையில் உள்ளதையே வாங்கவும். மிகச்சிறிய சீப்பு, கண்ணாடி போன்றவை உபயோகிக்காமல் 'சுற்றுக்களில்' செல்லும். சீப்போ,கண்ணாடியோ, தரவேண்டும் என்பதற்காக, உபயோகித்ததைத் தர வேண்டாம். தாம்பூலம் வாங்கிக் கொள்பவர் அம்பாளின் சொரூபம். அம்பிகைக்குச் செய்யும் பூஜையாக நினைத்துத் தான தாம்பூலம் தர வேண்டும். அவர் நமக்குப் பிடிக்காதவர் என்பதற்காக, உபயோகித்ததைத் தந்தால், பின் விளைவுகள் நமக்குத் தான்.

மஞ்சள்,குங்குமப் பாக்கெட்டுகளும் தரமானதாக இருக்கட்டும். இயலாவிட்டால், தாம்பூலம் வாங்க வருபவரிடம் மஞ்சள் குங்குமத்தை இட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, மற்றப் பொருட்களைத் தரலாம்.

நவராத்திரிகளில் 'கன்யாபூஜை' செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை (சுமங்கலிகளுக்குப் உணவளித்து, நலங்கு இட்டு, பின் தாம்பூலம் தருதல், இதையே சற்று விரிவாக, 'சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்கிறோம்) முதலியவையும் சிறந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம்பூலம் கொடுப்பதாலும்பெறுவதாலும் சுபிட்சம் விளையும். சிலர் சுபகாரியத் தடை நீங்க பூஜைகளும் பரிகாரங்களும் செய்பவர்கள் தாம்பூலம் தந்தால் பெறுவதில்லை. அந்த தோஷங்கள் தம்மைத் தொடரும் என்ற பயமே காரணம். அடுத்தவருக்கு நன்மை தராத எந்தச் செயலும், சம்பந்தப்பட்டவருக்கு நன்மை அளிப்பதில்லை என்பதை உணர வேண்டும். 

எல்லா உயிர்களிலும் தேவியின் அம்சம் உள்ளது. ஆகவே, யாராவது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தால், கட்டாயம் போக வேண்டும். வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தாமல் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பண்டிகை நாட்களில் பலரும் கூடி இருக்கும் நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் இருந்தால் அவர்கள் மனம் நோகாமல், அன்பளிப்புப் பொருட்களை வழங்கி,அவர்களை நமஸ்கரித்து, அவர்கள் ஆசியைப் பெறுவது சிறந்தது.

தாம்பூலம் தரும் முறைகள்:

1. தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.

2. பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மணை அல்லது பாய் போட்டு அமர்ந்து கொண்டு வாங்கவேண்டும். நலங்கு இடுவதானால், தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து, கால் அலம்பி வரச் சொல்லி, பிறகு உட்கார்த்தி வைத்து நலங்கு இடவும். 
பானகம் முதலிய பானங்களைக் குடிக்கத் தரவும். இல்லையென்றால் தண்ணீராவது தர வேண்டும். 

3. பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.
                                                                                 

4. தேங்காய் அளிப்பதானால், அதில் லேசாக மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அதைத் தாம்பூலப் பொருட்களோடு சேர்த்து, அம்மன் முன் காட்டவும். தேங்காயின் குடுமிப் பகுதி அம்பாளைப் பார்த்து இருக்க வேண்டும். அம்பாளின் அருள் அதில் இறங்கி, கொடுப்பவரும் வாங்குபவரும் நலம் பெற வேண்டிக்கொள்ளவும்.

                                 

5. பின் தாம்பூலப் பொருட்களை ஒரு தட்டில் வைத்துத் தரவும்.

6.பெற்றுக் கொள்பவர் வயதில் இளையவர் என்றால்,  அவர், கொடுப்பவருக்கு நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்ளவும்.

7.வயதில் பெரியவருக்குத் தாம்பூலம் கொடுப்பதானால், தாம்பூலம் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும்.

8. கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தாம்பூலத்தை முறத்தில் வைத்து, மற்றொரு முறத்தால் மூடிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. முறம் மஹாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கருகமணியும் தாம்பூலத்தில் வைத்து வழங்குகின்றனர். 

புடவைத்தலைப்பால் முறத்தை மூடி,தாம்பூலம் வழங்குகின்றனர்.  பெற்றுக் கொள்பவரும் அவ்வாறே பெறுகிறார்.

                                            

தர்மம், ஈகை, தயை, சாந்தி போன்ற குணங்கள் உலகில் பரவ வேண்டி, அம்பிகையைத் தொழுது வணங்கி, தாம்பூலமளித்து,

வெற்றி பெறுவோம்!