Thursday, February 23, 2012

அமாவாசை, பெளர்ணமி , கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள்

நமது தேசத்தில் எண்ணற்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு
கொண்டாட்டங்களுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பல்வேறு விழாக்கள் இருந்தாலும் நமது நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களின் பின்புலத்தில் எப்பொழுதும் மெய்ஞான காரணம் இருக்கத்தான் செய்கிறது.


எளிய மக்களுக்கு மெய்ஞான கருத்துக்கள் புரிவதில்லை என்பதால் அவர்களுக்கு விளக்கவும், சுவாரசியமாக இருக்கவும் கதைகள் மூலம் அவர்களின் ஆர்வத்தை மேம்டுத்தினார்கள். மெய்ஞான கருத்தை அறிய முடியாத சிலர், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சொல்லப்பட்ட கதைகளை பிடித்து தொங்குகிறார்கள். இங்கே மெய்ஞான கருத்து என குறிப்பிடுவது சாஸ்திர ரீதியான தன்மைகளை. விஞ்ஞானத்தை அல்ல.

மனித உடல் இயற்கையானது. மனிதனின் மனம் மற்றும் செயல்களும் இயற்கையை ஒட்டியே செயல்படுகிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என கேள்வி பட்டிருப்பீர்கள். அது போல பிரபஞ்சத்தில் என்ன நிகவுகள் இருந்தாலும் அந்த நிகழ்வு நமக்குள்ளும் நடக்கும்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் நடக்கும் நிகழ்வு தனிமனிதனுக்கு உள்ளும்
நடைபெறும். வேண்டுமானால் காலங்கள் வேறுபடலாம். ஆனால் கண்டிப்பாக நடைபெறும்.

மனிதன் பூமியில் வாழ்வதால், பூமி - சந்திரன் - சூரியன் எனும் இந்த மூன்று
பிரபஞ்ச பொருட்களும் மனித வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படுத்துகிறது.
முப்பரிமாண நிலையில் பூமி-சந்திரன்-சூரியன் ஆகிய கிரகங்கள் மனிதனுக்கு முறையே உடல், மனம் மற்றும் ஆன்மா எனும் நிலையில் செயல்படுகிறது.

பூமியில் இருக்கும் நெருப்பு- காற்று - நீர் - மண் மூலம் நமது உடல் வளர்ச்சி
அடைகிறது. 



உடலுக்கு பூமியே ஆதாரம். சூரியன் ஆன்மாவிற்கு ஆதாரம் என கூறலாம். காரணம் அது சுயமாக பிகாசிக்கிறது. சந்திரன் தனது நிலையற்ற தன்மையால் மனதை குறிக்கிறார்.

பிரபஞ்ச நிலைக்கும் மனித உடலுக்கும் இருக்கும் தொடர்பை அறிந்த ரிஷிகள், கிரகநிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப மனிதனை செயல்படுமாறு வழிநடத்தினார்கள். இந்த வழிமுறையை ஜோதிடம் என்கிறோம்.

மனிதனின் செயல்கள் இரு நிலையில் செயல்படுகிறது. ஒன்று உள் முகமாக, மற்றது வெளிமுகமாக. தியானம், யோக பயிற்சி மூலம் உள்முகமாகவும், உணர்வு-செயல் மூலம் வெளிமுகமாகவும் இருக்கலாம். மனிதர்கள் அதிக சதவிகிதம் வெளிமுகமாகவே இருப்பார்கள்.
 

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.


 அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியும் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியுங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என
அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். 



ஆனால் இன்று நடப்பதோ வேறு பெளர்ணமி நல்ல நாள் என திருமணம்,
தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

 அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். 



வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.
 

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். சூரியன் (கும்பத்தில் இருந்து - சிம்ம ராசியையும், சந்திரன் மகரத்தில் இருந்து - கடக ராசியையும் பார்க்க விருக்கின்றனர்). 


யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடது , வலது நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும். நாம் சுவாசிக்கும்போது, மூக்கின் இரண்டு துவாரங்களில் - ஒவ்வொரு குறிப்பீட்ட நேரத்துக்கும், ஒரு துவாரம் வழியாகவே , காற்று - போகவும் முடியும், வெளியேறவும் முடியும். சிறிது நேரம் கழித்து , அது மாறும். உங்கள் மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்து , கவனித்துப் பாருங்கள். இதன் பின் மிகப் பெரிய சூட்சுமம் இருப்பதை, நம் சித்தர் பெருமக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர்.
 

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். 


அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை
இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. 



இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவ எனும் சொல் அழகு அல்லது இயற்கை என்றும் பொருள்படும். அன்று இரவு உன்னதமான இயற்கை நிலையை காண உடல் தயார் நிலையில் இருப்பதால் சிவ ராத்திரி என அழைக்கப்படுகிறது.

சூரியன் சந்திரன் பூமி என்பது தனி ஒரு மனிதனுக்கோ, மதத்திற்கு செயல்படுவதில்லை. அதுபோலவே மஹாசிவராத்தரி “இந்துக்கள்” பண்டிகை அல்ல.

ஆன்மாவிற்கான கொண்டாட்டங்கள்.
ஆன்மாவில் கொண்டாடுங்கள்.
ஆன்மாவாய் கொண்டாடுங்கள்.
ஆன்மாவை உணர இன்றைய நாளை பயன்படுத்தி ஆன்மீகனாகுங்கள்.

No comments:

Post a Comment