Wednesday, March 23, 2016

பங்குனி உத்திர

12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று.
இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். இது ஈசனுக்குரிய அஷ்டமகா விரதங்களுள் ஒன்றாகும்.
பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும் பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது.
புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
புராணத் தகவல்கள் :
1. இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
2. காஞ்சியில் ஆற்றுமணலை பிடித்து வழிபட்ட காமாட்சி அன்னைக்கு அருள் புரிந்து, ஏகம்பரநாதருடன் திருக்கல்யாணம் நடந்தது இந்நாளில் தான்.
3. மதுரையில், மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான்.
4. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின்
மகளான தெய்வானையை இந்நாளில் தான் மணம் செய்து கொண்டார்.
5. இந்நாளில் தான் பாற்கடலில் இருந்து அன்னை மகாலட்சுமி தோன்றி, நாராயணனை மணந்த திருநாள் ஆகும். எனவே இதே நாள், அன்னையின் தோற்ற மற்றும் திருமண நாளாகவும் கொண்டாடப் பெறுவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்நாளை மகாலட்சுமி ஜெயந்தி என்றும் வழங்குவர்.
6. இந்நாளிலேயே ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னாரை கரம்பிடித்தார்.
7. மேலும், இந்நாளிலேயே பிரபு ஸ்ரீராமர் – சீதையின் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
8. இந்நாளிலேயே, பிரம்மதேவர் அன்னை சரஸ்வதியை மணந்தார்.
9. இந்நாளிலேயே இறைவன் தர்மசாஸ்தா அவதரித்தார்.
10. இந்நாளிலேயே தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடைபெற்றது.
11. இந்நாளிலேயே 27 நட்சத்திர கன்னியருக்கும், சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது.
12. இந்நாளிலேயே நம்பிராஜனுக்கு அன்னை ஸ்ரீவள்ளி அவதரித்தார்கள்.
மேலும் பல சிறப்புகள் :
1. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.
2. இவ்விரதத்தின் மகிமையால், இதே நாளில் அன்னை மகாலட்சுமி ஸ்ரீமன் நாராயணனின் மார்பில் இடம்பிடித்தார்கள்.
3. இவ்விரதத்தின் மகிமையால், இதே நாளில் அன்னை சரஸ்வதி பிரம்மதேவரின் வாக்கினில் இடம்பிடித்தார்கள்.
4. சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான்.
5. இந்நாளில் தான் அர்ஜுனன் அவதரித்தான் என மகாபாரதம் குறிப்பிடுகிறது.
6. இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும், பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும் மணந்து கொண்டதாக கந்தபுராணம் குறிப்பிடுகிறது.
7. இந்நாளில் தான் காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தார்.
ஆலய விசேஷங்கள் :
1. கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட திருவரங்கநாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான்.
வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய்
வரும் நம்பிக்கை.
2. அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். அந்த தலத்தின் வரலாறு அவர் முன்னிலையில் படிக்கப்படும்.
3. பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.
4. காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
5. மயிலையில் அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும். இந்நாளில், இறைவனைத் தொடர்ந்து 63 நாயன்மார்களும் ஊர்வலமாக வருவார்கள். இது 7ஆம் நூற்றாண்டில் இருந்து கடைபிடிக்கப்படும் தொன்மையான திருவிழா ஆகும்.
6. முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை அழித்ததற்குப் பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத் தந்தார்.
அந்த நாள் பங்குனி உத்திரமே. எனவே முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான தெய்வானையுடன் முருகனுக்குத் திருமணம் நடந்த தலமான திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது.
7. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அணிவகுக்கும் மச்சக்காவடி, சேவற்காவடி, கற்பகக் காவடி உலகப் பிரசித்தி பெற்றது. எனவே அன்றைய தினம் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று முருகனின் கல்யாணக் கோலம் கண்டு வாழ்வில் நன்மங்கலம் அடையப் பெறுவோம்.
8. சபரிமலை சாஸ்தாவாம் ஐயப்பனின் அவதார நன்னாள் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆறாட்டுவிழா நடக்கிறது. அன்று தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீசாஸ்தா நீராடும் புண்ணிய நதியில் நீராடினால் நாமும் புனிதமடைகின்றோம்.
விரத முறை :
பங்குனி உத்திர நன்னாள் குலதெய்வ வழிபாட்டுக்கு மிக மிக உகந்த நாள். இந்நாளில் குலதெய்வத்தை வழிபடுவது நம்முடைய குலம் தழைக்க உதவுகிறது. நம்முடைய முன்னோர்களின் பரிபூரண ஆசிகளை பெற்று தரக்கூடியது.
பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி மனத் தூய்மையோடு விரதம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் ஒருவேளை பால், பழம் சாப்பிடலாம். மாலையில் ஆலய தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். தெய்வ திருமண வைபவங்களை தரிசிக்க வேண்டும்.
ஆலயம் சென்று வணங்கி, அஸ்தமனத்தின் மேல் இரவிலே உணவுண்டு, வெறும் தரையில் ஒரு துணியை விரித்து அதன் மீது உறங்க வேண்டும். காலையில் மீண்டும் அம்மையப்பனை ஆலய தரிசனம் செய்து விட்டு பாரணை செய்து விரதம் பூர்த்தி செய்ய வேண்டும்.
பங்குனி உத்திரத்தில் சிவ பார்வதி படத்தை அலங்கரித்து சிவபார்வதி கல்யாண மூர்த்தியாக பாவித்து வழிபாடு செய்தல் வேண்டும். குத்து விளக்கேற்றி வைத்து, தாம்பூலத்தோடு சித்ரான்னங்கள், சர்க்கரைப் பொங்கலோடு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
பங்குனி உத்திர நாளில் திருவிளக்கு தீபத்தில் சிவன் பார்வதி இருவரும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே விளக்கு பூஜை செய்து நம் பாவங்கள் அகன்று மங்களம் கைகூடப் பெறலாம்.
கந்தக் கடவுளுக்கும் உரிய திருநாள் ஆதலால் ஆலய தரிசனத்தோடு இல்ல வழிபாட்டின் போது சஷ்டிக் கவசம் சொல்லி முருகனையும் வழிபட்டுச் சிறக்கலாம்.
விரத பலன்கள் :
தெய்வத் திருமணங்களை தரிசித்து, நம் வீட்டிலும் மங்கள விழாக்கள் நடக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். தெய்வத் திருமண உற்ஸவங்களில் கலந்து கொண்டு இறைவனிடம் நம் மனதின் பாரத்தை வைத்தால், நம் இல்லங்களிலும் கல்யாண கெட்டிமேளம் கேட்கும் வாய்ப்பு கூடிவரும் என்பது வழிவழியாக வரும் நம்பிக்கை.
பங்குனி உத்திர விரதம் இருந்து மகாலட்சுமி ஸ்ரீமன் நாராயணனின் மலர்க்கரம் பிடித்ததைப் போல் நம் வீட்டுப் பெண்கள் மற்றும் ஆண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் நல்ல பக்தி உடைய துணைவர் கிடைக்கப் பெறுவதுடன், வற்றாத செல்வ வளமும் உண்டாகும்.
பங்குனி உத்திர விரதம் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்வோருக்கு அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும் என்று விரத நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.
உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.
இந்நாளில் விரதம் இருக்க இயலாதவர்கள் அன்னதானம், வஸ்த்ரதானம் செய்வது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது.
பங்குனி உத்திர நாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment