Thursday, May 10, 2012

ரமண மகரிஷி and பால் பிரண்டன்...

டிஸ்கவரி சானல்ல - பழைய இந்தியா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி , ஹரித்வார் கும்பமேளா நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறப்போ - கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் , பரவச உற்சாகத்தில் - மேனியெல்லாம் விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு , காவி வேஷ்டி அணிந்த சாமியார்களை காட்டுவார்கள். பாம்பாட்டி, குரங்காட்டி என்று ஒரு ஸ்லாட்டாவது வரும்.

இதையெல்லாம் பார்க்கும் வெளி நாட்டுக்காரர்கள் மனதில்  - ஓ.. இந்தியாவில் இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பார்கள் என்கிற மனோபாவம் வந்துவிடுகிறது. சமீபத்திய IT புரட்சி நடந்து, இந்தியர்கள் உலகம் முழுவதும் இன்னும் அதிகமாக வசிக்கத் தொடங்கியபின், கொஞ்சம் மனோபாவம் மாறி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். இப்போதும், வெளி நாட்டில் இருந்து இங்கு வரும் நண்பர்கள், யாராவது காவி வேட்டியைக் கண்டால்  கொஞ்சம் மிரளத் தான் செய்கிறார்கள். மந்திரம் போட்டு விடுவார்களாம். நமக்குத் தானே தெரியும், இங்கு காவி கட்டி  பிச்சை எடுக்கும் பெரும்பாலோர் பிழைக்க வழியில்லாமல் / வேலை செய்ய பிடிக்காத சோம்பேறிகள் என்று. 

ஆனால், மேலை நாட்டு தத்துவம் படிப்பவர்கள் - நமது இந்தியாவை ஒரு ஞான பூமியாகத் தான் பார்க்கின்றனர். விஞ்ஞானம் விளங்க முடியாத பல விஷயங்கள் , இங்கு இருக்கும் சில துறவிகள் அனாயசமாக செய்வது, அவர்கள் வியக்கும் ஒன்று. 

பால் பிரண்டன் என்பவர் - ஒரு அறுபது , எழுபது வருடத்துக்கு முன்பு இந்தியா வந்தவர். உலகம் முழுவதும் - எகிப்திய பிரமிடு, இஸ்லாம் , இந்தியா , மந்திரவாதிகள், சித்தர்கள் என்று ஒரு விஷயம் கூட விடவில்லை. பிரித்து மேய்ந்து இருக்கிறார். அவரது புத்தகங்களை படித்த வெளிநாட்டவர்கள் - கூட்டம் கூட்டமாக இந்தியா வரத் தொடங்கினார்கள். இந்தியாவில் உள்ள ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பதை அவர் தன் அனுபவக் கட்டுரைகளாக விவரித்து இருந்த விதம் அருமை.  

உலகம் முழுவதும் தேடிக்கொண்டு இருந்த விஷயத்துக்கு , அவருக்கு விடை கிடைத்த இடம் எது தெரியுமா? எத்தனையோ மத குருமார்களுடன் ,  இந்தியாவிலும் மந்திரவாதிகள், சித்தர் புருஷர்கள் என அவருக்கு அனுபவம் இருந்தபோதிலும், கடைசியில் அவர் மனம் ஒடுங்கிய இடம், ரமண மகரிஷியிடம். அண்ணாமலையின் அடிவாரத்தில், அற்புதமான அருள் அலைகளுடன் - ஒரு மகான் அமர்ந்து இருப்பதை அவர் விவரித்து இருப்பதைப் படித்துப் பாருங்கள். 

எங்கிருந்தோ வருபவர்களுக்கு உள்ள தேடல், நாம் இன்னும் தொடங்கக் கூட இல்லாத ஒரு விஷயமாக இருப்பதை உணரமுடியும். சரி,  வாருங்கள் பால் பிரண்டன் நம்மிடம் எதையோ சொல்லக் காத்திருக்கிறார்...

"ஸ்வாமி, நான் மேலை நாட்டுத் தத்துவங்கள் நிறையப் படித்தவன். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆழமாகத் தனிமையில் சிந்தித்தவன். மேலை நாடுகளின் சொகுசான வாழ்க்கையின் பிடியில் அகப்பட்டு ஆன்மீகத் தேடல்களை மறந்ததும் உண்டு. ஒரு கட்டத்தில் அந்தத் தத்துவங்களில் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்று உணர்ந்து கீழை நாடுகளின் பக்கம் என் கவனம் திரும்பியது.''

 "இங்கும் பல தத்துவங்கள், பல சித்தாந்தங்கள், பல வாதங்கள் எல்லாம் ஏராளமாக இருக்கிறது. இதையெல்லாம் கேட்டும் படித்தும் நான் சலித்து விட்டேன். நான் மதவாதி அல்ல. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதை அறிவதும் என் நோக்கமல்ல. நம் கண்ணிற்குத் தெரிகிற இந்த மனித வாழ்க்கைக்கு அப்பாலும் ஏதாவது இருக்கிறதா? இருந்தால் நான் அதை அடைவது எப்படி?"

தொடர்ந்து தன் கருத்தைச் சொன்னார். "அறிவுக்குப் பெயர் போன எங்கள் விஞ்ஞானிகள் கூட இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அறிந்தது குறைவு என்று கைவிரித்து விட்டார்கள். உங்கள் புண்ணிய தேசத்தில் இதற்கான பதிலை நான் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள் மெய்ஞானம் பெற நீங்கள் எனக்கு உதவ முடியுமா? இல்லை நான் தேடி வந்ததே வெறும் கானல் நீரா? இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மகரிஷி கேட்டார். "நீங்கள் நிறைய முறை 'நான்' என்று சொல்லி விட்டீர்கள். எனக்குச் சொல்லுங்கள் "யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்கு முதலில் விளங்கவில்லை. இதென்ன கேள்வி என்று நினைத்தவர் தன்னைக் கையால் சுட்டிக் காட்டி தன் பெயரைச் சொல்லி இது தான் நான் என்று சொன்னார்.

"இது உங்கள் உடல். மீண்டும் கேட்கிறேன். 'யார் அந்த நான்?"

பால் ப்ரண்டனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

மகரிஷி சொன்னார். "அந்த நானை அறியுங்கள். உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் உடனடியாக விடை கிடைக்கும்"

"அதை எப்படி அறிவது"

"உங்களுடைய உண்மைத் தன்மையை ஆழமாக சிந்திப்பதாலும் இடைவிடாத தியானத்தாலும் அறியலாம்"

"நான் நிறையவே தியானம் செய்திருக்கிறேன். ஆனால் எந்த முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை"

"ஆன்மீக மார்க்கத்தில் முன்னேற்றம் என்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியாது"

"இதில் ஒரு குரு தேவையா?"


"இந்த தேடலுக்குத் தேவையானவற்றை குரு தரலாம். ஆனால் இதை அவரவரே தனிப்பட்ட அனுபவத்தால் தான் உணர முடியும்"

"இதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?"

"இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி நேரம் போதும். ஆனால் நிலக்கரிக்குத் தீப்பிடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது"

பால் ப்ரண்டன் பல கேள்விகளுக்குப் பின் உலகத்தின் தற்போதைய மோசமான நிலையைப் பற்றிச் சொல்லி உலகின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டார்.

"உலகத்தைப் படைத்தவனுக்கு அதை எப்படி பாதுகாப்பதென்று தெரியும். அந்தப் பாரம் அவனைச் சேர்ந்தது. உங்களுடையதல்ல"

ஆனால் தனி மனிதனுக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றி பால் ப்ரண்டன் சொல்ல மகரிஷி சொன்னார். "நீங்கள் எப்படியோ அப்படியே உலகமும். உங்களை முழுமையாக அறியாமல் உலகத்தை அறிய முற்படுவது பயனற்றது....."

அங்கு தங்கிய காலத்தில் மகரிஷியிடமிருந்து பால் ப்ரண்டன் எத்தனையோ கற்றுக் கொண்டார். மகரிஷி தியானத்தில் மூழ்கி இருக்கும் போது அவர் முகத்தில் தவழும் பேரமைதியைக் காணும் போதெல்லாம் 'எந்தத் துக்கமும் இந்தத் துறவியைத் தீண்டமுடியாது" என்ற உண்மை அவருள் வலுப்படும்.

ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."

"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"

"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."

"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"

இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட    எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள்.

அட, ஒருவேளை இந்த மாதிரி வர்ற திருடர்கள் கூட ஏமாந்து போகக்கூடாதுன்னு நினைச்சித்தான் , இந்த கால (ஆ) சாமிகள் நிறைய பணத்தை சேர்த்து வைக்கிறாங்களோ..  (# டவுட்டு) 

 ரமண மகரிஷி  அந்த கொள்ளையர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?

பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...." 

எப்பேர்ப்பட்ட மகான் பிறந்த பூமியில் நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா? உடனே இப்போ இருக்கிற ஆளுங்களை நினைச்சு கோபப்படாதீங்க. சாதாரண வேங்கட ரமணன் என்னும் சிறுவன், ரமண மகரிஷியாக மாறும்போது, நம்மால் அந்த அளவு முடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் நாம் யார் என்பதாவது உணர முற்படுவோமே..!

நாம், நம்ம வீடு, நம்ம ஊர், நம்ம நாடு, பூமி, சூரிய மண்டலம், பால்  வெளி, அண்ட பேரண்டம் - பற்றியெல்லாம் பார்க்கிறப்போ - அட போய்யா... இதுல கடவுளாவது ஒன்னாவது ... ... இதுல கடவுள் எங்கே இருக்க முடியும்? அப்படி ஒருத்தர் இருந்தா, நம்மளை பார்க்கிறது தான் வேலையா அவருக்குன்னு ஒரு கேள்வி வரலாம்.... 

உங்களுக்கு வருதோ , இல்லையோ - எனக்கு வருது.... 
இதோ , நாளைக்கு சித்ரா பௌர்ணமி. சித்திர குப்தன் பிறந்த நாள்னு ஒரு சிலர் சொல்றாங்க. அதுக்கு ஒரு கதை வேற.நம்ம செய்ற பாவ புண்ணியம் எல்லாம், அவர் கணக்கு வைப்பாராம். பயங்கர காமெடியா இருக்கு ... என்று தான் தோன்றுகிறது இல்லையா..?

ஆனா, சத்தமே இல்லாம சில மந்திர ஜெபங்கள் ஜெபித்து , நினைத்ததும் அகத்தியர் போன்ற சித்தர்களை தரிசனம் செய்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்களே..! தீராத சில பிரச்சினைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வும் பெறுகிறார்களே.. சித்தர் இருப்பது உண்மையெனில், அந்த இறைவன் ஒருவர் இருப்பது நிஜம் தானோ..?  வள்ளலாருக்கும், ரமணருக்கும், ராமக்ருஷ்ணருக்கும் கடவுள் காட்சி கொடுத்தது உண்மையென்றால், நமக்கும் அந்த பாக்கியம் ஏன் கிடைக்காது , முழுமையாக நம்பி, அவன் இடத்தில் நம் தீர்வு தேடுவோம்... வெற்றி நிச்சயம்.  

இறைவனுக்குக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல குரு ஒருவர் இருந்தால் நம் வேலையும் எளிது. தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை.. ஆனால் என்னதான் இருந்தாலும், ரமண மகரிஷி கூறியது போல அவரவர் தனிப்பட்ட அனுபவம் வேண்டும். அது கிடைக்க நாம் நம்முள்ளே தேடுவோம்... 

No comments:

Post a Comment