Thursday, December 29, 2011

பிச்சைக்காரன்

ஒரு சக்கரவர்த்தியிடம் ஒரு பிச்சைக்காரன் நிதி கேட்டுப் போனான். பிச்சைக் காரன் போன போது சக்கரவர்த்தி பிரார்த்தனையில் இருந்தார். ’அந்த நாட்டை நான் வெல்ல அருள் புரி, இந்த நாட்டை வெல்ல அருள் புரி, அந்த செல்வத்தைக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு...” என்று இடைவிடாமல் கோரிக்கைகளைச் சக்கரவர்த்தி சத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்.

பொறுத்து பொறுத்துப் பார்த்த பிச்சைக்காரன் கிளம்பி விட்டான். ”நானே தேவலை போல இருக்கிறது. என்னை விடப் பெரிய பிச்சைக்காரனாய் இந்த சக்கரவர்த்தி இருக்கிறார். என்னை விடப் பெரிய பட்டியல் வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரன் தன்னை விட மோசமாக தேவைகளில் இருக்கும் பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது நியாயமல்ல”

ஒரு விதத்தில் அவன் நினைத்தது உண்மையே. இரண்டுமே பிச்சை தான். பிச்சைக்காரன் உணவையும், காசுகளையும் பிச்சை கேட்டால், அரசர் நாடுகளையும், பல செல்வங்களையும் பிச்சை கேட்கிறார். பிச்சைக்காரனின் பிச்சைத்தட்டு சிறியது, சக்கரவர்த்தியின் பிச்சைப்பாத்திரமோ பெரியது.
இப்படித் தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்பது யாசகம் கேட்பதாய் இருக்கிறது. தேவைகளைப் பொருத்த வரை அரசன் முதல் ஆண்டி வரை சரி சமமாகவே இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment